ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

சன் டீவி மற்றும் நக்கீரன் ஊடகங்களின் வியாபார யுக்தி!

நித்யானந்தரின் லீலைகளை சிறப்பாக படம் பிடித்த அவரது முன்னால் சீடர் லெனின் என்பவர் காவலர் அதிகாரியிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சுவாமியின்(!) அந்தரஙக அநியாயஙகளை தடுக்க வேறு வழியின்றி நடிகையுடன் கூடிய வீடியோவை அவருக்கு தெரியாமல் எடுத்தாக கூறியுள்ளார்.

அதனை சன் குழுமத்திற்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை பலர் வியாபாரமாக்கியுள்ளனர். அவை

· சன் நியூஸ் “காணத்தவராதீர்கள்என்று பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளை வெளியிட்டு தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகபடுத்திக்கொண்டது. (தனது திரைப்படங்களில் இந்த கவனத்தை செலுத்தியிருந்தால் தமிழக மக்களில் பலர் காப்பாற்றபட்டிருப்பார்கள்.)

· நக்கீரன் தனது புத்தகங்களின் விற்பனையை கணிசமாக உயர்த்திக்கொண்டார். வண்ண படங்களுடன் வெளியிட்டு.. (நெற்றிக்கண் திறபபினும் குற்றம் குற்றமே என்றவரின் பெயரை வியாபார நோக்கிலேயே பயன்படுத்துகின்றனர்)

(ஆ)சாமியார்களைப் பற்றி நான் விமர்சித்து எழுத்துக்களை வீணாக்கப் போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் எதிர்பாத்ததுதான். ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள்தான் மிக மோசமான சமூக குற்றவாளிகாக நான் கருதுகிறேன்.

இறுதிவரை அதாவது, ஏமாற்றுப்பேர்வழி தண்டனை பெறும்வரை இவர்கள் போராடுவார்களா? என்பதே என்னுடைய ஆதஙகம்.


மேலும் மாலை மலரில் வந்த சில விபரங்கள்.

நித்யானந்தா ஆசிரமத்தில் வேலை பார்த்தவர் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்ற லெனின். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் 2004-ம் ஆண்டு முதல் நித்யானந்தா மீது ஏற்பட்ட பக்தி காரணமாக அவரது பெங்களூர் ஆசிரமத்துக்கு சென்று வரத் தொடங்கினேன். 2006 முதல் அங்கேயே தங்கி ஆசிரமத்தில் சேவை செய்தேன்.

அப்போது ஆசிரமத்துக்கு வரும் அப்பாவியான அழகான பெண்களிடம் தான் ஒரு கிருஷ்ணர் அவதாரம் என்று நித்யானந்தா சொல்வார். அதோடு அந்த பெண்களை கட்டிப் பிடிப்பார்.

அந்த பெண்களை கோபியர்என்றே நித்யானந்தா அழைப்பார். அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்த ஆசிரமத்தில் ஒருவர் இறந்துள்ளார். மற்றொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா அடிக்கடி உல்லாசமாக இருப்பார். லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றும் இவர் செயலை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்ததை நான் ரகசியமாக படம் பிடித்தேன்.

இதனை தெரிந்து கொண்ட நித்யானந்தா என்னை மிரட்டினார். கடந்த மாதம் 18,19ந்தேதிகளில் சேலம் அருகே உள்ள சீரகப்பாடியில் ஆசிரம திறப்பு விழாவுக்காக நித்யானந்தா வந்தார். அவருடன் நானும் சென்றேன்.

அப்போது அவர் என்னை வேனுக்குள் அழைத்து சென்று ரஞ்சிதாவுடன் நான் இருந்ததை படம் எடுத்தாயா அதை கொடுத்துவிடு இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அவருடன் இருந்த சீடர்களும் என்னை மிரட்டினார்கள். நான் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். எனவே சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் லெனின் கூறி இருந்தார்.

இது தொடர்பாக சென்னையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

சேலம் ஆத்தூரை சேர்ந்த லெனின் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சாமியார் நித்யானந்தா மீது 295 (ஏ) (மத உணர்வை துன்படுத்துதல்), 420 (மோசடி), 3¤76 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல்), 506 (1) (மிரட்டல்), 120 (பி) சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் லெனின் நித்யானந்தரின் படுக்கை அறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் வழக்குகள் அனைத்தும் அந்த மாநில போலீசாருக்கு மாற்றப்படும்.

இதற்கான ஏற்பாடுகள் தமிழக டிஜிபி மூலம் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக கர்நாடக போலீசாருக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் தமிழக போலீசார் செய்வார்கள்.

கேள்வி:- சென்னையில் யாராவது பாதிக்கப்பட்டு நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ளார்களா?

பதில்:- தனிப்பட்ட முறையில் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் தரவில்லை. இதுவரை எங்களிடம் வந்த 2புகார்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி:- சாமியார் நித்யானந்தா தொடர்புடைய விவகாரம் உங்கள் எல்லைக்குள் இல்லாத பட்சத்தில் அவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?

பதில்:- நாங்கள் விசாரிக்க முடியாது என்பதால்தான் வழக்குகளை கர்நாடக போலீசாருக்கு மாற்ற உள்ளோம்.

கேள்வி:- பர்மா பஜாரில் சாமியார் நித்யானந்தா சி.டி.க்கள் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் கூறப்படுகிறதே?

பதில்:- அப்படியா?

கேள்வி:- சாமியார் சி.டி. எவ்வளவு நேரம் ஓடுகிறது.

பதில்:- நான் சி.டி.யை பார்க்கவில்லை. (அருகில் இருந்த துணைக் கமிஷனர் ஸ்ரீதர் கூறுகையில் சாமியார் சி.டி. 2 1/2 மணி நேரம் ஓடுவதாக கூறினார்)

கேள்வி:- சாமியார் சி.டி. கிராபிக்ஸ் செய்யப்பட்டதா?

பதில்:- அது பற்றி எனக்குத் தெரியாது. நான் தொழில்நுட்ப வல்லுனர் இல்லை.

கேள்வி:- சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது நடிகை ரஞ்சிதா தானா?

பதில்:- ஆம் ரஞ்சிதா தான்.

கேள்வி:- ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களிடம் புகார் வந்துள்ளதா? அவர் மீது விபசார வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- யாரும் புகார் தரவில்லை. நீங்கள் கேட்பது இதற்கு பொருந்தாது.

கேள்வி:- ரஞ்சிதா மிரட்டப்பட்டதாக உங்களிடம் புகார் வந்துள்ளதா?

பதில்:- இல்லை.

கேள்வி:- சாமியார் தொடர்பான ஆபாச காட்சிகள் டி.வி.யில் அடிக்கடி வெளியானது. இது போன்ற ஆபாச காட்சிகள் சிறுவர்- சிறுமிகள் மனதை பாதித்து கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறப்படுவதால் இனி டி.வி.யில் ஆபாச காட்சிகள் வருவதை தடுப்பீர்களா?

பதில்:- பத்திரிகைகளுக்கே சென்சாரா?

இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்

(நன்றி : மாலைமலர்)


சென்னை, பிப். 25-








மத்திய பட்ஜெட்டுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வேளாண்மை, கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து நல்லதொரு நிதி நிலை அறிக்கையினை அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர், பிரனாப் முகர்ஜியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
விவசாயிகளுக்கு வரும் 2010-2011ஆம் ஆண்டில் மூன்று லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும், மத்திய அரசின் விவசாயிகளின் கடன் ரத்து மற்றும் தள்ளுபடி திட்டம் 30-6-2010 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும், விவசாயிகளின் பயிர்க்கடன்களுக்காக கூடுதலாக ஒரு சதவிகித வட்டி மானியம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருப்பதும் போற்றத்தக்கது.
கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 552 கோடி ரூபாய் இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத் தக்க ஒரு அறிவிப்பாகும்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், நமது கோரிக்கையினையேற்று - பின்னலாடை ஏற்றுமதிக்கு பெரிதும் உதவிடும் சாயத் தொழிலுக்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவிட மத்திய அரசின் நிதி உதவியாக ரூபாய் 200 கோடி ஒரு முறை மானியம் வழங்கப்படும் என்ற மிகப் பெரிய அறிவிப்புக்காக நான் எனது நன்றியினை மத்திய அரசுக்கும் குறிப்பாக பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 674 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதும் , சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்விற்கு 22 ஆயிரத்து 300 கோடி ரூபாய் - பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய் - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 40 ஆயிரத்து 100 கோடி ரூபாய் என்ற அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்று மகிழத்தக்க அறிவிப்புகளாகும்.
மேலும் தொடர்ந்து நாம் விடுத்து வரும் வேண்டுகோளையேற்று, இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட தற்போது அனுமதிக்கப்படும் தொகையான ரூபாய் 35 ஆயிரம் என்பது 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய தர வகுப்பினருக்கு உதவிடும் வகையில் வருமான வரி வீதங்களைக் குறைத்து சலுகை அளித்திருப்பதும் மகிழ்ச்சியினை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
சமூக நீதியையும், பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் 2010-2011ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்துள்ள மத்திய அரசுக்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கண்ணதாசன் யார்? 
சினிமா கவிஞர். 

அப்புறம்? 
அர்த்தமுள்ள இந்துமதம் போல இந்து மத புகழ்ப்பாடும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

அப்புறம்? 
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடியதோடு நிற்காமல் மது, மாது என்று வாழ்ந்து காட்டியவர்.

அப்புறம்?
அவ்ளோதான் தெரியும் - வனவாசம், மனவாசம் படிக்கும் வரை. இந்த புத்தகங்களை படித்தபிறகு தான் அவர் அரசியலில் எவ்வளவு ஈடுபட்டு இருக்கிறார் என்றும், அதில் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறார் என்றும் தெரிந்தது.

----

’மருதநாட்டு இளவரசி’ படம் தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் கருணாநிதியை பற்றி அறிந்தார் கண்ணதாசன். ’அபிமன்யு’ படத்தில் வரும் கருணாநிதியின் வசனங்கள், அவரை ஆறு நாட்கள் தொடர்ந்து அந்த படத்தை பார்க்கும் அளவுக்கு கவர்ந்தது. அப்பொழுது ஏற்பட்டது கருணாநிதியின் மீதான காதல் என்கிறார் கண்ணதாசன். கருணாநிதியை வகைத்தொகையில்லாமல் புகழ, அவரும் கண்ணதாசனை நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார். பிறகு, ’காதல் தேசம்’ வினீத், அப்பாஸ் போல இருந்திருக்கிறார்கள். எப்படி? ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்து தூங்கிற அளவுக்கு.

அந்நேரம் கருணாநிதி அரசியலிலும் இருந்ததால், பல விஷயங்களை கண்ணதாசனுடன் பகிர்ந்திருக்கிறார். திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சமயம், கருணாநிதி பெரியார் செய்த ’கொடுமை’களை பற்றி கூறி இருக்கிறார். விலகியதில் பெரிதும் மகிழ்ந்திருக்கிறார். திமுக முதல் அறிமுக கூட்டத்திற்கு கருணாநிதியால் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் கண்ணதாசன்.

அச்சமயம் சினிமாவில் கருணாநிதி பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். கண்ணதாசன் பல வேலைகளை மாறி மாறி பார்த்து, முடிவில் ’கன்னியின் காதலி’ என்ற படத்திற்கு முதல் பாடலை எழுதினார்.

பிறகு கருணாநிதியுடன் பல கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். சில அரசியல்வாதிகளுடன் பழகிய பிறகு அவருக்கு தோன்றியது, “கொண்ட கொள்கையில் எந்த அரசியல்வாதிக்கும் உறுதி இல்லை. எல்லா பிரச்சினைகளிலும் உயிரை கொடுப்பேன் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு, எத்தனை உயிர் இருக்கிறது?”

கண்ணதாசன் சொல்கிறார். “என் நண்பர் தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமான எழுதுவார். ஆனால், ஒரு பைசா பிச்சை போட மாட்டார். தொழிலாளர்களுக்காக, ரத்தம், நரம்பு என்று கட்டுரை எழுதுவார். ஆனால், அவரிடம் இருக்கும் தொழிலாளர்களுக்கு அதை கண்டு கொள்ள மாட்டார்”. விபச்சாரியிடம் கூட காரியம் முடிந்த பின்பு, காசை வாங்கி வந்தவராம் அவர் நண்பர்.

கண்ணதாசனும் அவர் நண்பரும் வாடகை கார் எடுத்து கொண்டு பெண்களுக்காக அலைந்திருக்கிறார்கள்.

முற்போக்கு என்கிற பேரில் வீட்டில் பொதுவில் வைக்க கூட முடியாதவாறு கதைகளை எழுதியவர் அவர் நண்பர். அதிலிருந்து அவர் எழுத்தை புறக்கணித்தார் கண்ணதாசன்.

----

“நான் தூத்துக்குடிக்கு பேச போகிறேன்?”

“உனக்கு என்ன பேச தெரியும்? எதுக்கு வீண் வேலை? வரவில்லையென்று சொல்லிவிடு”

இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதே, தான் வாழ வழியென்பது எனது நண்பனின் சித்தாந்தம் என்கிறார் கண்ணதாசன்.

கல்லக்குடி போராட்டதிற்கு சென்று, சிக்கி, வழக்குக்காக அலைந்து, சிறையில் அடைப்பட்டு கிடந்ததில் அரசியல் வெறுக்க, சிறையில் விடுதலையான பிறகு பத்திரிக்கை ஆரம்பித்தார் கண்ணதாசன். கருணாநிதிக்கோ, கல்லக்குடி போராட்டம் நல்ல மைலேஜ்ஜை கொடுக்க, கட்சியில் உயரத்திற்கு சென்றார்.

அடுத்த வந்த தேர்தலில் திருக்கோஷ்டியூரில் நின்றார் கண்ணதாசன். ஏனோதானோவென்று பிரச்சாரம் செய்து தோற்றுவிட்டார். அதற்கு பிறகு வந்த மாநகராட்சி தேர்தலில், கொஞ்சம் கடுமையாகவே உழைத்திருக்கிறார். தேர்தலில், திமுக பெரும்பான்மை பெற்றது. ’சரி, நம்மை பாராட்டுவார் அண்ணா’ என்று நினைத்து கொண்டிருக்கும்போது, அண்ணா கருணாநிதியை மட்டும் பாராட்டி மேடையில் கணையாழி அணிவித்தார்.

கடுப்பான கண்ணதாசன் அண்ணாவிடம் போய்,

“என்ன அண்ணா! இப்படி சதி செய்துவிட்டீர்களே?”

“அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்.” என்றார் அண்ணா.

-----

பிறகு திமுக வெறுத்து போக, கட்சியிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார். இன்னொரு பக்கம், சினிமாவிலும் வேகமெடுத்தார். கருணாநிதியோ, தமிழக அரசியலில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தார். கருணாநிதியை வெறுத்து கோபப்பட்டு தாக்கினார் கண்ணதாசன். கருணாநிதி, அதையெல்லாம் அப்போது அவருக்கு இருந்த மற்ற 
பிரச்சினையினால் கண்டுகொண்டிருக்கமாட்டார்.

ஒரு கட்டத்தில் காமராஜரிடமும் முட்டினார் கண்ணதாசன். திமுக பகுத்தறிவு என்ற பேரில் ராமன், கிருஷ்ணன் என்று கடவுள்களை செருப்பால் அடித்து கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்தியபோது, அவருக்கு வந்த ஆத்திரத்தில் இந்து ஆதரவு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். முதல் போணி, துக்ளக்கில் “நான் ஒரு இந்து”.

அண்ணா நோய்வாய்பட்டு இறந்தப்பிறகு, கருணாநிதி காலையிலும் மாலையிலும் எம்ஜிஆரை சென்று பார்த்து அவருடைய ஆதரவை பெற்று, கட்சியின் தலைவர் ஆனார். நாவலர், அண்ணா சமாதியில் அழுது கொண்டிருந்தார். கண்ணதாசன் “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதியிருந்தார். ’இந்திரா காங்கிரஸி’ல் சேர்ந்திருந்தார்.

அவருடைய கெட்ட நேரம், பிறகு கருணாநிதி இந்திராவுடன் கூட்டணி வைத்தார். “கருணாநிதிக்கு மேல் ஆளே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு கண்ணதாசன் நிலை ஆனது. அவரும் முடிவில் கருணாநிதி ஜோதியில் கலந்தார்.

----

இந்த புத்தகங்களில் கண்ணதாசன் மற்றவர்களை பற்றி மட்டும் எழுதவில்லை. தான் செய்த அயோக்கியத்தனங்களையும் எடுத்துரைத்திருக்கிறார். ரொம்ப அப்பிராணியாகவும் இருந்திருக்கிறார். கட்டுப்பாடில்லாத படகு போல் அலைகழித்திருக்கிறார். 

இந்த நிலையிலும் சினிமாவில் அவர் தொட்ட உயரம் அதிகம்தான். தன் கவிதை வரியால், கேட்போரை கட்டி போட்டார். கேட்போர் அனைவரையும் ரசிகராக்கினார். இதில் மட்டுமே, தன் முழு கவனத்தை செலுத்தியிருந்தால், இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார்.

இவர் ஏன் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை? சாணக்கியத்தனம் என்றைழைக்கப்படும் மொள்ளமாறித்தனம் பண்ண தெரியாததுதான்.

தங்கள் வாழ்க்கையை திறந்த புத்தகம் என்பார்கள் சிலர். நான் படித்த சுயசரிதைகளிலேயே இந்த புத்தகத்தில் தான், எந்த தயக்கமும் இன்றி தன் வாழ்க்கையை உண்மையிலேயே திறந்து வைத்திருக்கிறார் ஒரு ஆசிரியர்.

வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்வது போல் “பப்பரப்பேன்னு”.


Thanks to :www.saravanakumaran.com

மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?

அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் திகதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் திகதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜேர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்தனர்.

ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் தொடங்கினர்!

அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர்!

படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?

இன்னும் ஒரு சர்தார்ஜீ நகைச்சுவை
---------------------------------
ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று.
அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.
அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.
"அப்படியென்ன தவறு" என்று நி¢ருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில்வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.
அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அடிச்சாலுஞ்சரி.




இப்ப எங்க போனாலும் மொழிப்போர்,மொழிப்பாதுகாப்புன்னு கெடக்கு. நானும் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்..திடீர்னாப்ல மொழிக்கு இப்ப என்ன ஆபத்து வந்திடுச்சுன்னு..யாராச்சும் உன் மொழியில பேசக்கூடாதுன்னோ, படிக்கக்கூடாதுன்னோ இல்லன்னா இனிமே வேற மொழியிலதான் பேசனும்னோ, படிக்கனும்னோ மெரட்ராங்களா?

என்னா எதுக்குன்னு தெரியாமலே 'கட பேர அழி,பட பேர மாத்து'ன்னு ஆளாளுக்கு கத்துறாய்ங்க..குத்துறாய்ங்க. எத எப்டி செய்யனுன்னு இவிங்க சொல்றபடிதாஞ் செய்யனுமாக்கும். இதுல 'அப்டி சொல்லு..என்னையுஞ் சேத்துக்கோ'ன்னு கூட்டணி(கூத்தணி) வேற.

'கன்னடனுக்கு வெறி புடிச்சிறுச்சி'ன்னாய்ங்க..இப்ப அவிங்க இத என்னாம்பாய்ங்க? இப்டியே நாட்ல எல்லாரும் ஆரம்பிச்சாய்ங்கன்னா ஊரு உருப்படுமா? ஊருவிட்டு ஊரு போவ முடியுமா?

யோவ்..! யாருமே எந்த மொழியையுமே தேவப்பட்டாத்தேம் பேசுறோம். தேவயில்லாம பேசாதீங்கய்யா! யாரோ கண்டுபுடிச்ச 'கம்ப்யூட்ருக்கு' கணினின்னு பேரு வக்கிறோம், ஆனா அவங்கண்டுபுடிச்ச விண்வெளிக்கல்லுக்கு 'பொங்கல்'னு பேரு வச்சிகிறான். உடனே 'அவனுக்குத் தெரியிது அரும'ன்னு செல்றீங்க..அரும தெரிஞ்சா வச்சான்? பெருந்தண்மையா வச்சான்.
'எட்டுத்திக்கும் போய் எல்லாத்தையுங் கட்டிட்டுவந்து கொட்டுங்கப்பா'ன்னு நம்ம பாரதிதாசரு சொன்னாரோல்லியோ? குண்டுச்சட்டில குதிரை ஓட்டுனா எட்டுத்திக்கும் எப்டிய்யா போறதுன்னேன்?

இன்னொன்னுஞ் சொல்லிக்கறேன்..நாவொன்னுந் தாய்மொழிய மறந்துருன்னு சொல்லல. ஒரு சமுதாயத்தோட அடையாளம் மொழிதான். எல்லா மொழிக்காரனும் கூடுற இடத்துல, 'அய்யோ..அம்மா'ன்னு கத்துனா எல்லாருந் திரும்புவாங்க..ஆனா மத்தவன்லாம் பாத்துட்டு போய்க்கிட்டே இருப்பான்..நம்மாளு மடடும் நின்னு என்ன ஏதுன்னு கேப்பான். அதான்யா அடையாளம்.

அத மத்தவனும் மதிக்குபோதுதான் அது உயருது. எப்ப மதிப்பான்? நம்ம சரக்கு நல்லாயிருந்தாத்தான். நம்ம சரக்கு 'கட பேர்லயும்,பட பேர்லயும்' இல்லய்யா. கலையிலயும் பண்பாட்டுலயும் இருக்கு. அத மேம்படுத்த பாருங்க.

இயல்,இசை,நாடகம்னு எவ்ளவோ இருக்கு, திரைப்படத்துல அத கொண்டுவரச்சொல்லுங்க, எங்கயோவுல்ல கலாச்சாரத்த இங்க நடக்குதுன்னு காட்றாங்களே அத நிறுத்தச்சொல்லுங்க. நம்ம நடை,உடை,பாவனைகளை கேலியா காட்னா (கச்சய கட்னா..கோடு போட்ட உள்ளாடை..ஏன்..போடக்கூடாதா?) தடைவாங்கி நீக்கச்சொல்லுங்க.

நம்மவூரு தொலைக்காட்சி நிகழ்ச்சில தொர மாதிரி பேசறாங்களே அத எதித்து கொரலுவுடுங்க. நலிவடஞ்சிட்டுபோற கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்க புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கச் சொல்லுங்க.

கவிஞர்கள்,இசைஞர்கள் கூட்டு முயற்சில நல்ல தொகுப்புகள் வெளிவரச்செய்யுங்க, நம்மாளுங்களோட தரமான படைப்புகள உலக மொழிகள்ல மொழிபெயர்க்க இயக்கம் நடத்துங்க. இதன் மூலமா புதிய தொழில் வேலை வாய்ப்புகள உண்டக்குங்க.

இப்டி ஆக்கபூர்வமா எவ்ளவோ செய்றத உட்டுபுட்டு 'அடுத்தவன் உரிமைல' ஏன்யா தலவுடுறீங்க?

என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அடிச்சாலுஞ்சரி.

சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...

நாம் நகரத்தில் இருக்கிறோம்...சரளமாக ஆங்கிலம் பேசுகிறோம்.கணிணி இயக்கும் அறிவைப் பெற்றுள்ளோம்.இதனால் எல்லாம் நாம் புத்திசாலி ஆகிவிட முடியுமா?

இந்த விஷயங்கள்..கிராமவாசிகளுக்கு..இன்னும் எட்டவில்லை என்பதால் அவர்கள் முட்டாள்களா? உண்மைமைச் சொன்னால்...அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது.

உதாரணத்திற்கு ...காலில் காயம் பட்டுக்கொள்ளாமல்...கலப்பையை ஒரு அடியாவது..நம்மால் ஓட்டமுடியுமா?(கலப்பை என்றால் என்ன என்கிறீர்களா)

அளவுகோல் இல்லாமல்...நாற்றுகளை வரிசையாக நடமுடியுமா?

கையை..வீசி உரத்தை..பரவலாக..அனைத்து பயிருக்கும்..வீசி தெளிக்க முடியுமா?

நாம்..விவசாயம் பற்றி..ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டவர்கள்.அவர்கள் நிலத்தில் படித்தார்கள்.ஆகவே அவர்கள் அனுபவம்..நேரடியானது...ஆழமானது.

நாம் பள்ளியில் படித்து..புத்திசாலி என சொல்லிக் கொள்கிறோம் (???!!!!)

ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கற்றதை வைத்து..புத்திசாலி ஆகி இருக்கிறார்கள்.

தங்கள் வாரிசுகளை மேல்நிலைக்கு கொண்டுவர...நமக்கு நகரத்து கல்வியையும்,வசதியையும் வழங்கிய அவர்கள்..புத்திசாலிகளா..நாம் புத்திசாலிகளா?

அவர்கள் வறுமையில் வாடினாலும் பரவாயில்லை என..மண்ணிலே நெல் முத்து எடுத்து...நம் பசி தீர்க்கும்...அவர்கள் மேலானவர்களா? நாம் மேலானவர்களா?

அவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா?.

சுவர் இருந்தாலே...சித்திரம் எழுத முடியும்.

(ஒரு செய்தி- சென்ற ஆண்டு மட்டும்...வறுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 1,65,000 க்கு மேல் 

"என் மீது எந்தக் குற்றமுமில்லை"





ஒரு ஆற்றினில் தன் நண்பர்களுடன் ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். ஆற்றினில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவே நண்பர்கள் ஆற்றினில் இருந்து கரையேறினர்.ஆனால் ரமேஷ் மட்டும் கரையேரவில்லை.எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் இடுப்பளவு வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்கள் அவனை கரையேறும்படி வற்புறுத்தினர்.ஆனால் அவனோ எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் மார்பளவு வந்துவிட்டது.நண்பனில் ஒருவன் கயிறு கொடுத்து காப்பாற்ற உதவினான்.ஆனால் அவன் வரவில்லை.

தண்ணீர் அவன் வாய் வரை வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்களில் ஒருவன் கரையேறும்படி தான் கொண்டு வந்த சைக்கிள் டியூப்பினை அவனிடம் கொடுத்து கரையேறும்படி கூறினான்.

தண்ணீர் அவன் நெற்றியளவு வந்துவிட்டது.அவன் வானத்தை நோக்கி 'கடவுளை என்னைக் காப்பாற்று' எனக் கூறினான்.

அப்போது வானத்தில் தோன்றிய கடவுள் சொன்னார்.நான் உன்னைக் காப்பாற்றுவதற்காக முதலில் ஒருவனை அனுப்பினேன்.நீ வரவில்லை.என் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் மீண்டும் ஒருவனை அனுப்பினேன்.ஆனால் மீண்டும் நீ வரவில்லை. இதில் என் மீது எந்தக் குற்றமுமில்லை
எனக் கூறினார்

பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே

ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாயினும் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுடனும், அறுபதை தாண்டிய முதியவர்களுடனும் செலவிட்டு பாருங்கள். அந்த நாள் சிறப்பாய் அமையும் என்கிறார்கள். அவர்களிடமே நமக்கு கற்பதற்கு ஆயிரம் விஷயம் இருக்கும். ஆனால் நாம் தயங்கி அந்த நல்ல சந்தர்பங்களை நழுவ விடுகிறோம்.

பின்வரும் சம்பவம் மனித உறவுகளுக்கான கருத்தரங்கில், இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரியும் வெங்கடேஷ் பாலசுப்ரமணியம் விவரித்தது. இது தன் பெற்றோருக்கு முதல் விமான டிக்கெட் வாங்கி வந்த நிகழ்வும், அதன் பின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சி பற்றியது. இனிஅவருடைய சொந்த உணர்வுகளில், ...

அன்று என் பெற்றோர் சொந்த ஊருக்கு புறப்பட தயார் ஆனார்கள். அவர்கட்கான டிக்கெட்டை அந்த முறை JetAirways மூலம் பதிவு செய்தேன். அதற்கு முன் எனது தந்தை விமானத்தில் பயணித்தது இல்லை. டிக்கெட்டை அவர் கைகளில் கொடுத்த பொழுது முற்றிலும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த நிமிடமே குதூகலம் அவர் முகத்தில் அப்பிகொண்டது. பயணிக்கும் நொடிக்கான காத்திருப்பு, ஒரு பள்ளி சிறுவன் போல் அன்று அவர் தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

நாங்கள் அனைவரும் அன்று அவரை வழியனுப்ப அவருடன் விமான நிலையம் சென்று இருந்தோம். சுமைகளை எடுத்து செல்லும் டிராலி முதல், விமான நிலைய சோதனைகள், விமானத்தில் ஜன்னலோர சீட் என பரபரப்போடும், மகிழ்ச்சியோடும் இருந்தார். அவர் முற்றிலும் இந்த பயணத்தை அனுபவித்து செல்வது போல் இருந்தது, அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும். அவரது மகிழ்ச்சியை, இந்த அனுபவத்தை கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் விமான சோதனைக்கு செல்லும் முன் என்னை நோக்கி வந்தார். அப்படி வந்தவர் கண்களில் நன்றி பெருக்கிற்கான ஈரம் தெரிந்தது. நெகிழ்ச்சியோடு என்னிடம் தன் நன்றியை தெரிவித்தார். அந்த தருணத்தில் என் தந்தை மிக மிக உணர்சிவயப்பட்டவராய் காணப்பெற்றார். நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. அது அவருக்கு மிக பெரியதாக தோன்றியுள்ளது. நான் அவரிடம் நன்றி சொல்ல இதில் எதுவும் இல்லை என சொன்னேன்.

இந்த நிதழ்ச்சியுடன் பின்னர் என் வாழ்வை பற்றி நான் சிந்தித்து பார்த்தேன். நாம் குழந்தையாய் இருந்த தருணங்களில் நம் பெற்றோர் நம் எத்தனையோ கனவுகளை நனவாக்கி உள்ளனர். அவர்களின் அப்போதைய பொருளாதார நிலையை உணராமல், நாம் கிரிக்கெட் மட்டைகள், துணிமணிகள், 
பொம்மைகள் எனஅவ்வப்போது நச்சரித்து உள்ளோம். அவர்களின் இயலாமையிலும், நம்முடைய எல்லா தேவைகளையும், பூர்த்திசெய்திட முன்வந்துள்ளனர். நாம் எப்போதாவது, நம் பொருட்டு அவர்களின் தியாகத்தை எண்ணி உள்ளோமா? நம் விருப்பங்களுக்கு அவர்கள் எவ்வளவோ இழந்துள்ளனர்.

நாம் இதுவரை நம்பொருட்டு அவர்கள் செய்தவற்றிற்கு நன்றி செய்துள்ளோமா? நம் மகிழ்ச்சியை நன்றியை சொல்லி உள்ளோமா? அதே போல், இன்று நம் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது, நன்கொடையை பொருட்படுத்தாது நல்ல பள்ளியை தேர்ந்தெடுக்கிறோம். நம் குழந்தைகளுக்கு சிறப்பான பொம்மைகள், சிறப்பான தீம் பார்க்குகள் என பார்த்து பார்த்து செய்கிறோம்.
ஆனால் நாம் ஒன்றை முற்றிலும் மறந்து விட்டோம். நம் பெற்றோர் நம் மகிழ்ச்சிக்காக செய்த தியாகத்தை மறந்துவிட்டோம்.

ஆகவே நம்முடைய கடமை, அவர்களின் சிறிய சிறிய கனவுகளை நனவாக்க முயல்வதே. அவர்கள் இளமையில் பெற முடியாததை, அந்த சந்தோஷ தருணங்களை மீட்டு தருவதே. இவற்றை நாம் அவர்கட்கு அளித்தால் அவர்கள் வாழ்வு நிச்சயம் முழுமை அடையும்.

நிறைய தருணங்களில், என் பெற்றோர் சில கேள்விகளை கேட்பார்கள். அந்த தருணத்தில், பொறுமை இன்றி நான் பதில் சொல்லி உள்ளேன். ஆனால் அதற்கு மாறாக , இன்று என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நிறைய மரியாதையோடு பதில் சொல்லிவருகிறேன். நான் தற்போது உணர்கிறேன். என் பெற்றோர் அடைந்த வருத்தத்தை, இன்று என்னால் உணர முடிகிறது.

முதியவர்கள் அனைவரும், தம் இரண்டாவது குழந்தை பருவத்தில் உள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். இதுவும் நம் குழந்தைகளை போற்றி பாதுகாப்பது போன்றதே. அதே அக்கறையும், அதே சிரத்தையும், நம்முடைய முதிர்ந்த பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும்.

அவர்கள் பொருட்டு நேரம் ஒதுக்குவதும், பணிவோடு பதில் சொல்வதும், அவர்கட்கு மிக மிக அவசியம். அவர்களின் கண்ணை பார்த்து, மிக்க மகிழ்ச்சி வெளிப்பட பதில் சொல்ல வேண்டும் என்பதை உணர்கிறேன். பத்திரிக்கை படித்தவாறு ஒற்றை மொழியில் பதில் சொல்வதை தவிர்பேன். என்பொருட்டு அவர் நன்றி சொல்வதை விட்டு, இத்தனை காலம் அவரின் சின்ன சந்தோசத்தை நிறைவேற்றிட முன்வராமல் இருந்ததற்காக வருத்தபடுகிறேன். இன்று முதல் அவர்களின் சந்தோசத்திற்காக என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்.

அவர்கள் முதியவர்கள் என்பதற்காக அவர்களின் எல்லா ஆசைகளையும், இனியும் பேர குழந்தைகளை எண்ணி விட்டுவிட வேண்டியதில்லை. அவர்கட்கும் நியாயமான ஆசைகள் நெஞ்சத்தில் உண்டு.

அக்கறையோடு பெற்றோரை காத்திடுங்கள். உங்கள் பெற்றோர் விலைமதிக்க முடியாதவர்கள்!

சாலை சந்திப்பு ஒன்றில் சிக்னலுக்காக காத்திருந்த போது கவனித்த நிகழ்வு இது. 

டாக்ஸி ஒன்று எந்த ஒரு சைகையும் காட்டாமல் ஒரு சாலைக்குள் முரட்டுத்தனமாக வளைந்து நுழைந்த போது, பின்னே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென்று குறுக்கே வந்த டாக்ஸியால் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்து விட்டார். அவரிடம் இருந்த மொபைல் போன்ற பொருட்கள் எல்லாம் சாலையில் சிதறி விழுந்தன. நல்ல வேளையாக அவருக்கு பெரிய அடி ஒன்றும் பட வில்லை. 

சைகை அல்லது இண்டிகேட்டர் போட்டுக் கொண்டு சாலையில் திரும்பி இருக்கலாம் அல்லவா என்று மோட்டார் சைக்கிள் மனிதர் கேட்க, வண்டியை விட்டு வெளியில் வந்த டாக்ஸி டிரைவர் (தவறு அவர் மீதே இருந்த போதும்) சத்தம் போட ஆரம்பித்தார். ஒழுங்காக முன்னே பார்த்து வண்டியை ஒட்டி வர வேண்டியதுதானே என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீதே குற்றத்தை சுமத்தினார். இத்தனைக்கும் அவர் வண்டியில் (டாக்ஸி) எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குற்ற மனப்பான்மையை மறைக்கவே அப்படி சத்தம் போடுகிறார் என்று உணர முடிந்தது. 

அப்போது மோட்டார் சைக்கிள் நண்பரின் நடவடிக்கை என்னை கவர்ந்தது. அமைதியாக சென்று கீழே விழுந்த பொருட்களை சேகரித்தார். எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், நிறுத்தாமல் தொடர்ந்து இரைந்து கொண்டே இருந்த டாக்ஸி ஓட்டுனரைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் அவருக்கு ஒரு பெரிய சல்யூட் வைத்து "சென்று வாருங்கள்" என்று சைகை செய்தார். இப்போது டாக்ஸி டிரைவர் மூச்சடைத்துப் போய் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 

அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் எனக்கும் கூட பேசாமலேயே ஏதோ உணர்த்தியது போல இருந்தது, 

"குற்ற மனப்பான்மை இல்லாதவருக்குத்தான் சமாதானம் பேச முன்வரும் தைரியம் இருக்கும். விட்டுக் கொடுப்பவர்தான் வெற்றி பெற்றவராகிறார் ."

இந்த உண்மை அனைவருக்கும் புரிந்தால் இன்று எத்தனை பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து போய் இருக்கக் கூடும்?

அப்போது அவருக்கு நான் கூட ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.